திமுக மீது அவதூறு பரப்பிய பெண் மீது 153- A பிரிவின் கீழ் வழக்குப்பதிவு.! தேர்தல் ஆணையம் அதிரடி.!

0
Follow on Google News

’கழக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டுள்ள ‘கலப்பு மணம் செய்தால் ரூ.60,000 நிதி மற்றும் தாலிக்கு 8 கிராம் (22 கேரட்) தங்கம் வழங்கப்படும்’ என்ற வாக்குறுதி குறித்து அவதூறு பரப்பியவர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் 153- A பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்து திமுக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில்,

பேரறிஞர் அண்ணாவினால் 1967-ல் துவங்கப்பட்ட கலப்பு திருமணங்களுக்கு நிதியுதவி அளிக்கும் திட்டம் பல்வேறு காலங்களில் அனைத்து அரசுகளாலும் மேம்படுத்தப்பட்டது. தற்போது “கலப்பு திருமணம் செய்து கொள்ளும் மணமக்களில் ஒருவர் ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் பழங்குடியினர் எனில் அவர் பிற இனத்தவரை மணைந்து கொண்டால் வழங்கப்படும் நிதியுதவி 60 ஆயிரம் ரூபாய் மற்றும் தாலிக்கு 8 கிராம் (22 கேரட்) தங்கம் காசும் வழங்கப்படும்.” என்று திராவிட முன்னேற்றக் கழகத்தின் 2021-தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் வெற்றி உறுதிப்படுத்தப்பட்டது என்பதை அறிந்த மாற்று அணியினர் பல்வேறு பொய்ப் பிரச்சாரங்களை செய்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக ஒரு பெண்மணி, தி.மு.க. தனது தேர்தல் அறிக்கையில் சில குறிப்பிட்ட சமூகத்து பெண்களை கலப்பு திருமணம் செய்தால், நிதியுதவி அளிப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளதாக பொய்ப் பிரச்சாரத்தை செய்து, அந்த காணொலியை சமூக வலைதளங்களில் பரப்பி வந்தனர்.

அந்த காணொலியில், பல்வேறு சமூகங்களிடையே வன்மத்தைத் தூண்டும் விதமாகவும் பேசப்பட்டிருக்கிறது. இந்தப் பொய்ப் பிரச்சார காணொலியை தடை செய்ய வேண்டும். மேலும், அதற்குக் காரணமானவர்கள்மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்று கழக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி,எம்.பி., அவர்கள், மாநில தேர்தல் அதிகாரியிடம் புகார் மனு அளித்திருந்தார்.

இதனை ஆராய்ந்த மாநில தேர்தல் அதிகாரி, “அந்த காணொலிக்கான காரணமானவர்கள்மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 153A-ன் கீழ் வழக்கு பதிவு செய்திட” தமிழக காவல்துறை இயக்குநருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், மாநில தேர்தல் அதிகாரி மற்றொரு கடிதத்தின் மூலமாக இந்திய தேர்தல் ஆணையத்தின் சார்பு செயலாளர் (Under Secretary) அவர்களுக்கு இந்த காணொலியை அனைத்து சமூக வலைதளங்களிலிருந்தும் நீக்கிட ஆவன செய்திட பரிந்துரை செய்துள்ளார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.