இறந்தவர் சாதியை ஆராய்ந்து பகுத்து அறிவது தான் பகுத்தறிவா? விவேக் மரணத்தில் கி.வீரமணி செயலுக்கு கடும் எதிர்ப்பு.!

0
Follow on Google News

நகைசுவை நடிகர் விவேக் மரணம் சினிமா ரசிகர்கள் மட்டுமின்றி அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது, விவேக் மரணத்துக்கு பல்வேறு அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் அஞ்சலி செலுத்தினர், திராவிட கழக தலைவர் கி.வீரமணி வெளியிட்டிருந்த இரங்கல் செய்தி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது, அவர் நடிகர் விவேக் மறைவுக்கு வெளியிட்ட இரங்கல் செய்தியில்.

சிறந்த நகைச்சுவை நடிகரும், சீரிய சமூகப் பற்றாளருமான நண்பர் விவேக் அவர்கள் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று (17.4.2021) அதிகாலை உயிரிழந்தார் என்று பேரதிர்ச்சியான செய்தி நம்மை பெரும் வருத்தத்துக்கு ஆளாக்குகிறது. பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்து, அரசுப் பணியில் இருந்தபடி கலைத் துறையில் நுழைந்து, பின்னர் திரைத் துறையில் பெரு வெற்றி பெற்ற நடிகர் விவேக் அவர்கள் சமூக சீர்திருத்தக் கருத்துகளைத் தன் படங்களில் வெளிப்படுத்தி, அதையே தன் அடையாளமாகவும் மாற்றிக் கொண்டவர்.

குறிப்பாக ‘திருநெல்வேலி’ திரைப்படத்தில் தொடங்கி பல படங்களில் மூடநம்பிக்கைகளுக்கு எதிராக பகுத்தறிவுக் கருத்துகளைப் பரப்பி, நம்மால் ‘பெரியார் விருது’ வழங்கிப் பாராட்டப் பெற்றவர். திரைத் துறையில் மட்டுமல்லாமல், தன் வாழ்விலும் பொதுப் பணிகளில் ஈடுபட்டு, சமூகச் செயல்பாட்டாளராகத் திகழ்ந்தவர். சுற்றுச்சூழல் காக்க மரக் கன்றுகள் நடுதலை பேரியக்கமாக நடத்தியவர். பொது நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று சமூக அக்கறையுடன் உரையாற்றி, இளைஞர்களுக்கு ஊக்கமூட்டியவர்; விழிப்புணர்வூட்டியவர். உலகத் தமிழர்களால் விரும்பப்பட்டவர்.

59 ஆண்டுக்குள் அவருடைய மறைவு தமிழ்த் திரையுலகத்திற்கு மட்டுமல்ல, தமிழ்ச் சமூகத்திற்கே பேரிழப்பாகும். அவருடைய குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும், திரைத் துறையினருக்கும் நமது இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறோம். என கி.வீரமணி வெளியிட்டிருந்த இரங்கல் செய்தியில் நடிகர் விவேக் அவர்களை பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் பிறந்தவர் என குறிப்பிட்டிருந்தது கடும் எதிப்பு கிளம்பியுள்ளது.

சாதியை ஒழிக்க கிளம்பிய நீங்கள், இறந்தவர் என்ன சமூகம் என்று ஆராய்ந்து பகுத்து அறிவது தான் பகுத்தறிவா?? அதென்ன பிற்படுத்த்பட்ட சமூகம்?? நாங்க அவர மனிதனா தான் பார்த்தோம். நீங்க தான் என்ன சாதின்னு பார்க்கிறீர்கள், அவர் இறந்து விட்டார் என்று அனைவரும் வேதனையில் இருக்கிறார்கள், அவர் குடும்பத்திற்கு அனுதாபம் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் ஆனால் நீங்கள் மட்டும் அவர் ஜாதி என்ன என்பதில் கவனம் செலுத்தி உள்ளீர்கள் எனகி வீரமணியை கண்டித்து குரல் எழுப்பி வருகின்றனர்.